பிரபாகரனியம் (பகுதி 02)

#பிரபாகரனியம் 2ம் பகுதி

(எழுத்துப்பிழைகள் சொற்பிழைகளை மன்னிக்கவும்)

தமிழர் ஏகாம்பரம் திருகோணமலையில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டது தமிழரசுக்கட்சியின் ஆதரவாளரான பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு வருத்தத்தை அளித்தது,… அஹிம்சையும் அழிக்கப்பட்டு விட்டது என்ற கோபம் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை…

அதன்பின்னரும் சிங்கள அரசு தன் கோரமுகத்தை கொடூரமாக காட்டத்தொடங்கியது… தமிழர்களின் பாடசாலைகள் முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டது. தமிழர்களின் கல்வியில் சிங்களவர் பெருமைகளும் பவுத்த மத மாண்புகளும் புத்தரின் சிந்தனைகளும் புகுத்தப்பட்டது.. அரச அலுவலங்கள் யாவற்றிலும் சிங்களவர்கள் புகுத்தப்பட்டனர். வேலை வேண்டும் எனில் சிங்களம் படிக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தமிழர்கள் தன்மானத்தை இழந்து வேலை செய்ய விரும்பவில்லை. வேலையை ராஜினாமா செய்து விட்டு கானா,, பிலிப்பைன்ஸ்,, மலேசியா என கடல் கடந்து சென்றனர்.

தமிழர்கள் உச்சகட்டமாக விரக்தியில் இருந்தனர். அந்தச்சந்தர்ப்பத்தில்தான். அடக்குமுறைய அடக்குமுறையால்தான் அடக்க வேண்டும் என்ற நோக்குடன் 20 இளைஞர்கள் சேர்ந்து
“புலிப்படை” என்ற இயக்கத்தை உருவாக்கினர்.. அதில் தமிழரசுக்கட்சியின் வேலனைத்தொகுதின் பாராளுமன்ற உறுப்பினரான வி.நவரத்தினம் பெரும் பங்கு வகித்தார். ஆனாலும் அந்த அமைப்பால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.. ஆரம்பித்த சிறிது காலத்திலயே அழிக்கப்பட்டு விட்டது…

தமிழர்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் வெளிப்படையாகவே ஆரம்பிக்கப்பட்டது.. ஆனாலும் தமிழரசுக்கட்சியால் அதனை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. பல சத்தியாக்கிரக போராட்டங்களும் எதிர்ப்புகளையும் மட்டுமே செய்து வந்த தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் இலங்கை அரசுடன் இணைந்துதான் இருந்தது. அத்துடன் தமிழரசுக்கட்சி கூட்டு ஆட்சி முறையைத்தான் முன்மொழிந்தது. இது தமிழ் இளைஞர்களிடம் பெரும் சினத்தை ஏற்படுத்தியது. ஆனால் சி.நவரத்தினம் மற்றும் சுந்தரலிங்கம் என்னும் இரு தமிழர்களும் தனி ஈழம்தான் நமக்கான தீர்வு என முன்வைத்தார்கள் அதுதான் தனித்தமிழ் ஈழம் என்னும் நாட்டுக்கான குரல். காலங்கள் உருண்டோடின

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அப்போது இலங்கை அரசின் காணி சம்மந்தமான உத்தியோகத்தில் இருந்தார், தமிழர்கள் இனி கல்வியால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும் என நம்பிய வேலுப்பிள்ளை தனது 4 பிள்ளைகளையும் கல்வி மீது கவனம் செலுத்த நிர்ப்பந்தித்தார். பிரபாகரனின் அண்ணன் மனோகரன் நல்ல அரசு வேலையிலும் 2 சகோதரிகளும் நல்ல முறையில் திருமணம் முடித்து விட்டனர். ஆனாலும் கடைக்குட்டி பிரபாகரனின் மீது வேலுப்பிள்ளைக்கு மிகுந்த கவலை இருந்தது. பிரபாகரனின் போக்கு அவருக்கு சரியாகப்படவில்லை. பிரபாகரன் சிலோன் சிவில் சேவையில் இணைய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். ஆனால் பிரபாகரனுக்கோ அந்த சிலோனையே எதிர்த்து போராட வேண்டும் என்னும் நோக்கம் இருப்பது அவருக்கு அப்போது தெரியாது…

இதனிடையே வல்வெட்டித்துறையில் சிங்கள இராணுவத்தின் வெறிச்செயல் தலைவிரித்தாடியது.. பெண்களுடன் அத்துமீறலும் இளைஞர்கள் மீதான தாக்குதலும் இந்துக்கோவில்கள் மீதான உடைப்புச்சம்பவங்களும் நடந்த வண்ணம் இருந்தது. பிரபாகரனின் வீட்டின் முன்பே சில சம்பவங்களும் நடந்தன.

பிரபாகரன் அப்போது கிழக்கில் உள்ள மட்டக்களப்பில் ஆரம்பக்கல்வியைக்கற்றார். அதன்பிறகு சொந்த ஊரில் ஆலடி சிவகுரு வித்தியாலத்திலும் ஊரிக்காட்டு சிதம்பரம் கல்லூரில் 10 வகுப்பு வரை பயின்றார்.

ஆனால் பிரபாகரன் பாடசாலைக் கல்வியில் மந்தமாகத்தான் இருந்தார்.. அரசியலிலும் போராட்டத்திலும்தான் அவர் முழுக்கவனம் இருந்தது.. தந்தை இதனால் மடம் உடைந்தார்.. சரி இவனை இப்படியே விட்டால் வேலைக்காது என்று நினைத்து மாலை நேர வகுப்பிற்கு அனுப்புகிறார்.

அந்த வகுப்பின் ஆசிரியர் வெறும் 24 வயது மதிக்கத்த இளைஞர். பெயர் வேணுகோபால் சாஸ்திரி மாஸ்டர். பொன்னுசாமி சாஸ்திரிகளின் மகன்.. அங்குதான் பிடித்தது சிங்களவனுக்கு ஏழரைச்சனி..பிரபாகரனின் ஆசிரியர் வேணுகோபால் புரட்சி மீது நம்பிக்கை கொண்டவர். தனியான தமிழீழம்தான் தமிழருக்கு விடிவைத்தரும் என கொள்கை கொண்டிருந்தார்.

மாலை 6.15 முதல் 9 வரை நடக்கும் வகுப்புகளில் உலக புரட்சிகள் பற்றியும் இந்திய சுந்ததிரம் பற்றியும் ஆழமாக கற்பித்து தமிழனுக்கான தனி நாடே நிரந்த தீர்வு என பிரபாகரனுக்கு பாடம் புகுட்டினார். அப்போது பிரபாகரனுக்கு வயது 14 ,மட்டுமே..

இந்திய சுதந்திர தியாகிகள் பற்றி பக்கம் பக்கமாக பேசினார். இந்தியத்தியாகிகள் பற்றியும் உலக ப்போராளிகள் பற்றியும் உணர்வுபூர்வமாக சொல்லிக்கொடுத்தார்.

பிரபாகரனின் தந்தை நேருவையும் காந்தியையும் நேசித்தவர். அஹிம்சை விரும்பி. ஆனால் பிரபாகரனுக்கு அவர்கள் மீது நாட்டம வரவில்லை. அவர் கண்ணுக்கு இந்திய சுதந்திரம் நேதாஜியாலும் பகத்சிங்காலும் மட்டுமே பேற்றுக்கொடுக்கப்பட்டது என ஆழமாக தோன்றியது.

வேணுகோபால் மாஸ்டரின் வகுப்புகளால் நேதாஜி என்ற ஒரு சொல் பிரபாகரனை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து நேதாஜியை விரும்பிப்படிக்க ஆரம்பித்தார்.. அந்த நேரங்களில் இந்தியாவில் இருந்து வந்த பல வாரப்பத்திரிக்கைகளில் வரும் நேதாஜியின் படங்களையும் கதைகளையும் வெட்டி வைத்துக்கொள்வார் நேதாஜி என்றால் வீரம். வீரம் என்றால் நேதாஜி என்பது அவர் எண்ணம்…. நேதாஜி சுபாஷ் சந்திரபோசை போலவே இலங்கை அரசை நாமே இராணுவத்தை கட்டியெழுப்பி எதிர்த்துப் போராட வேண்டும் என உறுதி கொண்டார். நேதாஜியை தலைவராக ஏற்றுக்கொண்டார் என்பதை விட அவரை மானசீகமாக காதலித்தார் என்றே சொல்லலாம்.

போராட மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டும் என்றும் அதன்பின்னர். இலங்கை ஆர்மியை எதிர்க்க வேண்டும் என உறுதி கொள்கிறார்.

சரி எதிர்க்கலாம். ஆயுதத்தால் எதிர்க்கலாம். ஆனால் ஆயுதத்திற்கு எங்கே போவது?????…. வெறும் 14 வயதுச்சிறுவன்… யாரைத்தெரியும் அவனுக்கு??…

பிரபாகரனுக்கு அப்போதைய தேவை ஒரு துப்பாக்கி.. எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு சரி எங்க மாஸ்டரிடமே கேட்டிடலாம் என்று வேணுகோபால் மாஷ்டரிம் போய் கேட்கிறார்,

“மாஸ்டர் எனக்கு ஒரு துவக்கு வேணும். வாங்கித்தாங்கோ” என்கிறார், மாஸ்டருக்கு தூக்கிவாரிப்போட்டது… சிறிது நேரம் அமைதியின் பின்னர். சரி சரி துப்பாக்கி எல்லாம் பிறகு வாங்கலாம். முதலில் போய் கம்புச்சண்டை பழகுங்கோ என்று பிரபாகரனை திருப்பி அனுப்புகிறார். பிரபாகரனுக்கு ஒரே ஏமாற்றம் .. மாஸ்டரே இப்படிச்சொல்லி விட்டாரே என நினைக்கிறார். ஆனாலும் துப்பாகி மீதான வெறி அவருக்கு குறையவில்லை

தன்னைப்போலவே ஆயுதப்போராட்டம் மீது காதல் கொண்ட 7 பேரைத்தன்னிடம் சேர்த்துக்கொள்கிறார். சிங்களவனைத்தாக்க நாம் பயிற்சி எடுக்க வேண்டும்.. அதற்கு நமக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள் அதற்கு பணம் வேண்டுமே?? என்ன செய்வது.. ??? . சரி சேமிப்போம். மிட்டாய்க்கும் உணவிற்கும் கொடுக்கும் பணத்தை 7 பேரிடமும் சேமிக்குமாறு கேட்கிறார், வாரம் 25 பைசாதான் கிடைக்கும். பரவாயில்லை. சிறுக சிறுகச்சேர்த்து துப்பாக்கியை வாங்கி விட வேண்டும் என முடிவெடுக்கிறார்.

தொடரும்....

கருத்துகள் இல்லை

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.